Thursday, October 6, 2016

தெய்வப் பாடல்கள் - வள்ளிப்பாட்டு - 1

வள்ளிப்பாட்டு - 1

    பல்லவி

    எந்த நேரமும் நின் மையல் ஏறுதடீ
    குறவள்ளீ, சிறு கள்ளி!

    சரணங்கள்

    (இந்த) நேரத்தி லேமலை வாரத்தி லேநதி
                யோரத்தி லேயுனைக் கூடி -நின்றன்
    வீரத் தமிழ்ச் சொல்லின் சாரத்தி லேமனம்
    மிக்க மகிழ்ச்சிகொண் டாடி - குழல்
    பாரத்தி லேஇத ழீரத்தி லேமுலை
          யோரத்திலே அன்பு சூடி - நெஞ்சம்
    ஆரத் தழுவி அமர நிலை பெற்றதன்
          பயனை யின்று காண்பேன். (எந்த நேரமும்)

    வெள்ளை நிலாவிங்கு வானத்தை மூடி
          விரிந்து மொழிவது கண்டாய் - ஒளிக்
    கொள்ளை யிலேயுனைக் கூடி முயங்கிக்
          குறிப்பிணி லேயொன்று பட்டு - நின்றன்
    பிள்ளைக் கிளிமென் குதலியி லேமனம்
          பின்ன மறச் செல்லவிட்டு - அடி
    தெள்ளிய ஞானப் பெருஞ்செல்வ மே! . நினைச்
          சேர விரும்பினன் கண்டாய். (எந்த நேரமும்)

    வட்டங்க ளிட்டுங் குளமக லாத
          மணங்ப்பெருந் தெப்பத்தைப் போல - நினை
    விட்டு விட்டுப்பல லீலைகள் செய்து நின்
          மேனி தனைவிட லின்றி - அடி
    எட்டுத் திசையும் ஒளிர்ந்திடுங் காலை
          இரவியைப் போன்ற முகத்தாய்! - முத்தம்
    இட்டுப் பலமுத்த மிட்டுப் பலமுத்தம்
          இட்டுனைச் சேர்ந்திட வந்தேன். (எந்த நேரமும்)

No comments:

Post a Comment