Wednesday, October 5, 2016

தெய்வப் பாடல்கள் - சிவசக்தி புகழ்

சிவசக்தி புகழ்

    ராகம் - தன்யாசி தாளம் - சதுஸ்ர ஏகம்

    ஓம், சக்திசக்தி சக்தியென்று சொல்லு - கெட்ட
    சஞ்சலங்கள் யாவினையும் கொல்லு ,
    சக்திசக்தி சக்தியென்று சொல்லி - அவள்
    சந்நிதியி லேதொழுது நில்லு.

    ஓம், சக்திமிசை பாடல்பல பாடு - ஓம்
    சக்திசக்தி என்று தாளம் போடு.
    சக்திதருஞ் செய்கைநிலந் தனிலே - சிவ
    சக்திவெறி கொண்டுகளித் தாடு.

    ஓம், சக்திதனையே சரணங் கொள்ளு - என்றும்
    சாவினுக்கோ ரச்சமில்லை தள்ளு.
    சக்திபுக ழாமமுதை அள்ளு - மது
    தன்னிலினிப் பாகுமந்தக் கள்ளு.

    ஓம் சக்திசெய்யும் புதுமைகள் பேசு - நல்ல
    சக்தியற்ற பேடிகளை ஏசு.
    சக்திதிருக் கோயிலுள்ள மாக்கி - அவள்
    தந்திடுநற் குங்குமத்தைப் பூசு.

    ஓம் சக்தியினைச் சேர்ந்ததிந்தச் செய்கை - இதைச்
    சார்ந்து நிற்ப தேநமக்கொ ருய்கை,
    சக்தியெனும் இன்பமுள்ள பொய்கை - அதில்
    தன்னமுத மாரிநித்தம் பெய்கை.

    ஓம் சக்திசக்தி சக்தியென்று நாட்டு - சிவ
    சக்தியருள் பூமிதனில் காட்டு,
    சக்திபெற்ற நல்லநிலை நிற்பார் - புவிச்
    சாதிகளெல் லமதனைக் கேட்டு.

    ஓம் சக்திசக்தி சக்தியென்று முழங்கு - அவள்
    தந்திரமெல் லாமுலகில் வழங்கு.
    சக்தியருள் கூடிவிடு மாயின் உயிர்
    சந்ததமும் வாழுநல்ல கிழங்கு.

    ஓம் சக்திசெய்யுந் தொழில்கலை எண்ணு - நித்தம்
    சக்தியுள்ள தொழில்பல பண்ணு,
    சக்திகளை யேஇழந்துவிட்டால் - இங்கு
    சாவினையும் நோவினையும் உண்ணு.

    ஓம் சக்தியரு ளாலுலகில் ஏறு - ஒரு
    சங்கடம்வந் தாலிரண்டு கூறு,
    சக்திசில சோதனைகள் செய்தால் - அவள்
    தண்ணருளென் றேமனது தேறு.

    ஓம் சக்திதுணை என்றுநம்பி வாழ்த்து - சிவ
    சக்திதனையே அகத்தில் ஆழ்த்து,
    சக்தியும் சிறப்பும்மி கப்பெறுவாய் - சிவ
    சக்தியருள் வாழ்கவென்று வாழ்த்து!

No comments:

Post a Comment