Thursday, October 6, 2016

தெய்வப் பாடல்கள் - சிவசக்தி

சிவசக்தி

    இயற்கை யென்றுரைப்பார் - சிலர்
          இணங்கும்ஐம் பூதங்கள் என்றிசைப்பார்,
    செயற்கையின் சக்தியென்பார் - உயிர்த்
          தீயென்பர் அறிவென்பர், ஈசனென்பர்,
    வியப்புறு தாய்நினக்கே - இங்கு
          வேள்விசெய் திடுமெங்கள் ஓம் என்னும்
    நயப்படு மதுவுண்டே? - சிவ
          நாட்டியங் காட்டிநல் லருள் புரிவாய்.

    அன்புறு சோதியென்பார் - சிலர்
          ஆரிருட் காளியென் றுனைப்புகழ்வார்,
    இன்பமென் றுரைத்திடுவார் - சிலர்
          எண்ணருந் துன்பமென் றுனைஇசைப்பார்,
    புன்பலி கொண்டுவந்தோம் - அருள்
          பூண்டெமைத் தேவர்தங் குலத்திடுவாய்
    மின்படு சிவசக்தி - எங்கள்
          வீரைநின் திருவடி சரண்புகுந்தோம்.

    உண்மையில் அமுதாவாய் - புண்கள்
          ஒழித்திடு வாய்களி, உதவிடுவாய்,
    வண்மைகொள் உயிர்ச்சுடராய் - இங்கு
          வளர்ந்திடு வாய்என்றும் மாய்வதிலாய்,
    ஒண்மையும் ஊக்கமுந்தான் - என்றும்
          ஊறிடுந் திருவருட் சுனையாவாய்
    அண்மையில் என்றும் நின்றே - எம்மை
          ஆதரித் தருள்செய்யும் விரதமுற்றாய்.

    தெளிவுறும் அறிவினை நாம் - கொண்டு
          சேர்த்தனம், நினக்கது சோமரசம்,
    ஒளியுறும் உயிர்ச்செடியில் - இதை
          ஓங்கிடு மதிவலி தனிற்பிழிந்தோம்,
    களியுறக் குடித்திடுவாய் - நின்றன்
          களிநடங் காண்பதற் குளங்கனிந்தோம்,
    குளிர்சுவைப் பாட்டிசைத்தே - சுரர்
          குலத்தினிற் சேர்ந்திடல் விரும்புகின்றோம்.

    அச்சமும் துயரும் என்றே - இரண்டு
          அசுரர்வந் தெமையிங்கு சூழ்ந்துநின்றார்,
    துச்சமிங் கிவர்படைகள் - பல
          தொல்லைகள் கவலைகள் சாவுகளாம்,
    இச்சையுற் றிவரடைந்தார் -எங்கள்
          இன்னமு தைக்கவர்ந் தேகிடவே,
    பிச்சையிங் கெமக்களித்தாய் - ஒரு
          பெருநகர் உடலெனும் பெயரினதாம்.

    கோடிமண் டபந்திகழும் - திறற்
          கோட்டையிங் கிதையவர் பொழுதனைந்தும்
    நாடிநின் றிடர்புரிவார் - உயிர்
          நதியினைத் தடுத்தெமை நலித்திடுவார்,
    சாடுபல் குண்டுகளால் - ஒளி
          சார்மதிக் கூட்டங்கள் தகர்த்திடுவார்
    பாடிநின் றுனைப்புகழ்வோம் - எங்கள்
          பகைவரை அழித்தெமைக் காத்திடுவாய்.

    நின்னருள் வேண்டுகின்றோம் - எங்கள்
          நீதியுந் தர்மமும் நிலைப்பதற்கே,
    பொன்னவிர் கோயில்களும் - எங்கள்
          பொற்புடை மாதரும் மதலையரும்,
    அன்னநல் லணிவயல்கள் - எங்கள்
          ஆடுகள் மாடுகள் குதிரைகளும்,
    இன்னவை காத்திடவே - அன்னை
          இணைமலர்த் திருவடி துணைபுகுந்தோம்.

    எம்முயி ராசைகளும் - எங்கள்
          இசைகளும் செயல்களும் துணிவுகளும்
    செம்மையுற் றிடஅருள்வாய் - நின்றன்
          சேவடி அடைக்கலம் புகுந்துவிட்டோம்.
    மும்மையின் உடைமைகளும் - திரு
          முன்னரிட் டஞ்சலி செய்து நிற்போம்,
    அம்மைநற் சிவசக்தி - எமை
          அமரர்தம் நிலையினில் ஆக்கிடுவாய்.

No comments:

Post a Comment