Thursday, October 6, 2016

தெய்வப் பாடல்கள் - ஓம் சக்தி

ஓம் சக்தி

    நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
          நிறைந்த சுடர்மணிப் பூண்.
    பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம், இவள்
          பார்வைக்கு நேர் பெருந்தீ.
    வஞ்சனை யின்றிப் பகையின்றிச் சூதின்றி
          வையக மாந்த ரெல்லாம்,
    தஞ்சமென் றேயுரைப்பீர் அவள் பேர், சக்தி
          ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம்.

    நல்லதுந் தீயதுஞ் செய்திடும் சக்தி
          நலத்தை நமக்கிழைப் பாள்,
    அல்லது நீங்கும் என்றே யுலகேழும்
          அறைந்திடுவாய் முரசே!
    சொல்லத் தகுந்த பொருளன்று காண்! இங்கு
          சொல்லு மவர் தமையே!
    அல்லல் கெடுத்தம ரர்க்கிணை யாக்கிடும்
          ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம்.

    நம்புவ தேவழி யென்ற மறைதன்னை
          நாமின்று நம்பி விட்டோம்
    கும்பிட்டெந் நேரமும் சக்தி யென் றாலுனைக்
          கும்பிடுவேன் மனமே!
    அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும்
          அச்சமில் லாதபடி
    உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும்பதம்
          ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம்.

    பொன்னைப் பொழிந்திடு மின்னை வளர்த்திடு,
          போற்றி உனக்கிசைத் தோம்,
    அன்னை பராசக்தி என்றுரைத் தோம், தளை
          அத்தனையுங் களைந்தோம்,
    சொன்ன படிக்கு நடந்திடு வாய், மன
          மே தொழில் வேறில்லை, காண்,
    இன்னு மதே யுரைப்போம், சக்தி ஓம் சக்தி
          ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம்.

    வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொரு
          ளாக விளங்கிடு வாய்!
    தெள்ளு கலைத் தமிழ் வாணி! நினக்கொரு
          விண்ணப்பஞ் செய்திடுவேன்,
    எள்ளத் தனைபொழுதும் பயனின்றி
          இரா தென்றன் நாவினிலே
    வெள்ள மெனப்பொழி வாய்சக்தி வேல், சக்தி
          வேல், சக்தி வேல், சக்தி வேல்!

No comments:

Post a Comment