Wednesday, October 5, 2016

தெய்வப் பாடல்கள் - மஹா காளியின் புகழ்

மஹா காளியின் புகழ்

    காவடிச் சிந்துராகம் - ஆனந்த பைரவி தாளம் - ஆதி

    காலமாம் வனத்திலண்டக் கோலமா மரத்தின் மீது
    காளிசக்தி யென்றபெயர் கொண்டு - ரீங்
    காரமிட் டுலவுமொரு வண்டு - தழல்
    காலும் விழி நீலவண்ண மூலஅத்து வாக்களெனும்
    கால்களா றுடைய தெனக் கண்டு - மறை
    காணுமுனி வோருரைத்தார் பண்டு.
    மேலுமாகி கீழுமாகி வேறுள திசையுமாகி
    விண்ணும் மண்ணு மானசக்தி வெள்ளம் - இந்த
    விந்தையெல்லா மாங்கதுசெய் கள்ளம் - பழ
    வேதமா யதன்முனுள்ள நாதமாய் விளங்குமிந்த
    வீரசக்தி வெள்ளம் விழும்பள்ளம் - ஆக
    வேண்டும் நித்த மென்றனேழை யுள்ளம்.

    அன்புவடி வாகிநிற்பள் துன்பெலா மவளிழைப்பாள்
    ஆக்கநீக்கம் யாவுமவள் செய்கை - இதை
    ஆர்ந்துணர்ந்த வர்களுக்குண் டுய்கை - அவள்
    ஆதியா யநாதியா யகண்டறி வாவளுன்றன்
    அறிவுமவள் மேனியிலோர் சைகை - அவள்
    ஆனந்தத்தி னெல்லை யற்ற பொய்கை.
    இன்பவடி வாகிநிற்பள் துன்பெலா மவளிழைப்பாள்
    இஃதெலா மவள்புரியும் மாயை - அவள்
    ஏதுமற்ற மெய்ப்பொருளின் சாயை - எனில்
    எண்ணியேஓம் சக்தியெனும் புண்ணிய முனிவர்நித்தம்
    எய்துவார் மெய்ஞ் ஞானமெனுந் தீயை - எரித்து
    எற்றுவாரிந் நானெனும் பொய்ப் - பேயை.

    ஆதியாஞ் சிவனுமவன் சோதியான சக்தியுந்தான்
    அங்குமிங்கு மெங்குமுள வாகும் - ஒன்றே
    யாகினா லுலகனைத்தும் சாகும் - அவை
    யன்றியோர் பொருளுமில்லை அன்றியொன்றுமில்லை
    ஆய்ந்திடில் துயரமெல்லாம் போகும் இந்த
    அறிவு தான் பரமஞான மாகும்.
    நீதியா மரசுசெய்வார் நிதிகள்பல கோடி துய்ப்பர்
    நீண்டகாலம் வாழ்வர் தரைமீது - எந்த
    நெறியுமெய்து வர்நினைத்த போது - அந்த
    நித்தமுத்த சுத்தபுத்த சத்தபெருங் காளிபத
    நீழலடைந் தார்ர்கில்லையோர் தீது - என்று
    நேர்மைவேதம் சொல்லும் வழியிது.

No comments:

Post a Comment