Wednesday, October 5, 2016

தெய்வப் பாடல்கள் - விடுதலை வெண்பா

விடுதலை வெண்பா

    சக்தி பதமே சரணென்று நாம்புகுந்து
    பக்தியினாற் பாடிப் பலகாலும் - முக்திநிலை
    காண்போம், அதனாற் கவலைப் பிணிதீர்ந்து
    பூண்போம் அமரப் பொறி.

    பொறிசிந்தும் வெங்கனல்போற் பொய்தீர்ந்து தெய்வ
    வெறிகொண்டால் ஆங்கதுவே வீடாம் - நெறிகொண்ட
    வையமெலாந் தெய்வ வலியன்றி வேறில்லை
    ஐயமெலாந் தீர்ந்த தறிவு.

    அறிவிலே தோன்றில் அவனியிலே தோன்றும்
    வறிஞராய்ப் பூமியிலே வாழ்வீர்; - குறிகண்டு
    செல்வமெலாம் பெற்றுச் சிறப்புறவே சக்திதரும்
    வெல்வயிரச் சீர்மிகுந்த வேல்.

    வேலைப் பணிந்தால் விடுதலையாம்! வேல்முருகன்
    காலைப் பணிந்தால் கவலைபோம் - மேலறிவு
    தன்னாலே தான்பெற்று சக்திசக்தி சக்தியென்று
    சொன்னால் அதுவே சுகம்.

    சுகத்தினைநான் வேண்டித் தொழுதேன், எப்போதும்
    அகத்தினிலே துன்புற் றழுதேன் - யுகத்தினிலோர்
    மாறுதலைக் காட்டி வலிமை நெறிகாட்டி
    ஆறுதலைத் தந்தாள் அவள்.

No comments:

Post a Comment