Wednesday, October 5, 2016

தெய்வப் பாடல்கள் - தேச முத்துமாரி

தேச முத்துமாரி

    தேடியுனைச் சரணடைந்தேன், தேச முத்துமாரி!
    கேடதனை நீக்கிடுவாய், கேட்டவரந் தருவாய்

    பாடியுனைச் சரணடைந்தேன், பாசமெல்லாங் களைவாய்,
    கோடிநலஞ் செய்திடுவாய், குறைகளெல்லாந் தீப்பாய்.

    எப்பொழுதும் கவலையிலே இணக்கி நிற்பான் பாவி,
    ஒப்பியுன தேவல்செய்வேன் உனதருளால் வாழ்வேன்.

    சக்தியென்று நேரமெல்லாந் தமிழ்க் கவிதை பாடி
    பக்தியுடன் போற்றி நின்றால் பய மனைத்துந் தீரும்.

    ஆதாரம் சக்தியென்றே அருமறைகள் கூறும்,
    யாதானுந் தொழில் புரிவோம், யாதுமவள் தொழிலாம்.

    துன்பமே இயற்கையெனும் சொல்லைமறந் திடுவோம்,
    இன்பமே வேண்டி நிற்போம், யாவுமவள் தருவாள்.

    நம்பினோர் கெடுவதில்லை, நான்கு மறைத் தீர்ப்பு,
    அம்பி கையைச் சரண்புகுந்தால் அதிகவரம் பெறலாம்.

No comments:

Post a Comment