Thursday, October 6, 2016

தெய்வப் பாடல்கள் - சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம்

சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம்

    ராகம் - பூபாளம் தாளம் - சதுஸ்ர ஏகம்

    கையைச், சக்தி தனக்கே கருவி யாக்கு - அது
    சாதனைகள் யாவினையுங் கூடும் - கையைச்
    சக்தி தனக்கே கருவியாக்கு - அது
    சக்தியுற்றுக் கல்லினையுஞ் சாடும்.

    கண்ணைச், சக்தி தனக்கே கருவி யாக்கு - அது
    சக்தி வழியதனைக் காணும் - கண்ணைச்
    சக்தி தனக்கே கருவி யாக்கு - அது
    சத்தியமும் நல்லருளும் பூணும்.

    செவி, சக்தி தனக்கே கருவியாக்கு - சிவ
    சக்தி சொலும் மொழியது கேட்கும் - செவி
    சக்தி தனக்கே கருவியாக்கு - அது
    சக்திதிருப் பாடலினை வேட்கும்.

    வாய், சக்தி தனக்கே கருவியாக்கு - சிவ
    சக்தி புகழினையது முழங்கும் - வாய்
    சக்தி தனக்கே கருவியாக்கு - அது
    சக்தி நெறி யாவினையும் வழங்கும்.

    சிவ, சக்திதனை நாசி நித்தம் முகரும் - அதச்
    சக்தி தனக்கே கருவியாக்கு - சிவ
    சக்தி தங்ருச் சுவையினை நுகரும் - சிவ
    சக்தி தாக்கே எமது நாக்கு.

    மெய்யைச், சக்தி தனக்கே கருவியாக்கு - சிவ
    சக்தி தருந் திறனதி லேரும் - மெய்யைச்
    சக்தி தனக்கே கருவியாக்கு - அது
    சாதலற்ற வழியினை தேறும்.

    கண்டம், சக்தி தனக்கே கருவியாக்கு - அது
    சந்ததமும் நல்லமுதைப் பாடும் - கண்டம்
    சக்தி தனக்கே கருவியாக்கு - அது
    சக்தியுடன் என்றும் உறவாடும்.

    தோள், சக்தி தனக்கே கருவியாக்கு - அது
    தாரணியும் மேலுலகுந் தாங்கும் - தோள்
    சக்தி தனக்கே கருவியாக்கு - அது
    சக்தி பெற்று மேருவென ஓங்கும்.

    நெஞ்சம், சக்தி தனக்கே கருவியாக்கு - அது
    சக்தியுற நித்தம் விரிவாகும் - நெஞ்சம்
    சக்தி தனக்கே கருவியாக்கு - அதைத்
    தாக்க வரும் வாளொதுங்கிப் போகும்.

    சிவ, சக்தி தனக்கே எமது வயிறு - அது
    சாம்பரையும் நல்லவுண வாகும் - சிவ
    சக்தி தனக்கே எமது வயிறு - அது
    சக்தி பெற உடலினைக் காக்கும்.

    இடை, சக்தி தனக்கே கருவியாக்கு - நல்ல
    சக்தியுள்ள சந்ததிகள் தோன்றும் - இடை
    சக்தி தனக்கே கருவியாக்கு - நின்றன்
    சாதிமுற்றும் நல்லறத்தில் ஊன்றும்.

    கால், சக்தி தனக்கே கருவியாக்கு - அது
    சாடியெழு கடலையுந் தாவும் - கால்
    சக்தி தனக்கே கருவி யாக்கு - அது
    சஞ்சலமில் லாமலெங்கும் மேவும்.

    மனம், சக்தி தனக்கே கருவியாக்கு - அது
    சஞ்சலங்கள் தீர்ந்தொருமை கூடும் - மனம்
    சக்தி தனக்கே கருவி யாக்கு - அதில்
    சாத்துவீகத் தன்மையங்னைச் சூடும்.

    மனம், சக்தி தனக்கே கருவியாக்கு - அது
    சக்தங்யற்ற சங்ந்தனைகள் தீரும் - மனம்
    சக்தி தனக்கே கருவியாக்கு - அதங்ல்
    சாரும் நல்ல உறுதங்யும் சீரும்.

    மனம், சக்தி தனக்கே கருவியாக்கு - அது
    சக்தி சக்தி சக்தியென்று பேசும் - மனம்
    சக்தி தனக்கே கருவியாக்கு - அதங்ல்
    சார்ந்தங்ருக்கும் நல்லுறவும் தேசும்.

    மனம், சக்தி தனக்கே கருவியாக்கு - அது
    சக்தி நுட்பம் யாவினையும் நாடும் - மனம்
    சக்தி தனக்கே கருவியாக்கு - அது
    சக்தி சக்தி யென்று குதித் தாடும்.

    மனம், சக்தி தனக்கே கருவியாக்கு - அது
    சக்தியினை எத்திசையும் சேர்க்கும் - மனம்
    சக்தி தனக்கே கருவியாக்கு - அது
    தான் விரும்பில் மாமலையைப் பேர்க்கும்.

    மனம், சக்தி தனக்கே கருவியாக்கு - அது
    சந்தமும் சக்திதனைச் சூழும் - மனம்
    சக்தி தனக்கே கருவியாக்கு - அதில்
    சாவுபெறும் தீவினையும் ஊழும்.

    மனம், சக்தி தனக்கே உரிமையாக்கு - எதைத்
    தான் விரும்பி னாலும்வந்து சாரும் - மனம்
    சக்தி தனக்கே உரிமையாக்கு - உடல்
    தன்னிலுயர் சக்திவந்து சேரும்.

    மனம், சக்தி தனக்கே கருவியாக்கு - இந்தத்
    தாரணியில் நூறுவய தாகும் - மனம்
    சக்தி தனக்கே கருவியாக்கு - உன்னைச்
    சாரவந்த நோயழிந்து போகும்.

    மனம், சக்தி தனக்கே கருவியாக்கு - தோள்
    சக்தி பெற்றுநல்ல தொழில்செய்யும் - மனம்
    சக்தி தனக்கே கருவியாக்கு - எங்கும்
    சக்தியருள் மாரிவந்து பெய்யும்.

    மனம், சக்தி தனக்கே கருவியாக்கு - சிவ
    சக்தி நடையாவும் நன்கு பழகும் - மனம்
    சக்தி தனக்கே கருவியாக்கு - முகம்
    சார்ந்திருக்கும் நல்லருளும் அழகும்.

    மனம், சக்தி தனக்கே கருவியாக்கு - உயர்
    சாத்திரங்கள் யாவும் நன்குதெரியும் - மனம்
    சக்தி தனக்கே கருவியாக்கு - நல்ல
    சத்திய விளக்கு நித்தம் எரியும்.

    சித்தம், சக்தி தனக்கே உரிமையாக்கு - நல்ல
    தாளவகை சந்தவகை காட்டும் - சித்தம்
    சக்தி தனக்கே உரிமையாக்கு - அதில்
    சாரும் நல்ல வார்த்தைகளும் பாட்டும்.

    சித்தம், சக்தி தனக்கே உரிமை யாக்கு - அறு
    சக்தியை யெல்லோர்க்கு முணர் வுறுத்தும் - சித்தம்
    சக்தி தனக்கே உரிமை யாக்கு
    சக்திபுகழ் திக்கனைக்கும் நிறுத்தும்.

    மனம், சக்தி தனக்கே உரிமையாக்கு - அது
    சக்தி சக்தி என்று குழலூதும் - சித்தம்
    சக்தி தனக்கே உரிமையாக்கு - அதில்
    சார்வதில்லை அச்சமுடன் சூதும்.

    சித்தம், சக்தி தனக்கே உரிமையாக்கு - அது
    சக்தி யென்று வீணைதனில் பேசும் - சித்தம்
    சக்தி தனக்கே உரிமையாக்கு - அது
    சக்திபரி மளமிங்கு வீசும்.

    சித்தம், சக்தி தனக்கே உரிமையாக்கு - அது
    சக்தி யென்று தாளமிட்டு முழக்கும் - சித்தம்
    சக்தி தனக்கே உரிமையாக்கு - அது
    சஞ்சலங்கள் யாவினையும் அழிக்கும்.

    சித்தம், சக்தி தனக்கே உரிமையாக்கு - அது
    சக்திவந்து கோட்டை கட்டி வாழும் - சித்தம்
    சக்தி தனக்கே உரிமையாக்கு - அது
    சக்தியருட் சித்திரத்தில் ஆழும்.

    மதி, சக்தி தனக்கே உடைமையாக்கு - அது
    சங்கடங்கள் யாவினையும் உடைக்கும் - மதி
    சக்தி தனக்கே உடைமையாக்கு - அங்கு
    சத்தியமும் நல்லறமும் கிடைக்கும்.

    மதி, சக்தி தனக்கே உடைமையாக்கு - அது
    சாரவருந் தீமைகளை விலக்கும் - மதி
    சக்தி தனக்கே உடைமையாக்கு - அது
    சஞ்சலப் பிசாசுகளைக் கலக்கும்.

    மதி, சக்தி தனக்கே உடைமையாக்கு - அது
    சக்தி செய்யும் விந்தைகளைத் தேடும் - மதி
    சக்தி தனக்கே உடைமையாக்கு - அது
    சக்தியுறை விடங்களை நாடும்.

    மதி, சக்தி தனக்கே உடைமையாக்கு - அது
    தர்க்கமெனுங் காட்டிலச்சம் நீக்கும் - மதி
    சக்தி தனக்கே உடைமையாக்கு - அதில்
    தள்ளிவிடும் பொய்ந்நெறியும் தீங்கும்.

    மதி, சக்தி தனக்கே உடைமையாக்கு - அதில்
    சஞ்சலத்தின் தீயவிருள் விலகும் - மதி
    சக்தி தனக்கே உடைமையாக்கு - அதில்
    சக்தியொளி நித்தமுநின் றிலகும்.

    மதி, சக்தி தனக்கே உடைமையாக்கு - அதில்
    சார்வதில்லை ஐயமெனும் பாம்பு - மதி
    சக்தி தனக்கே உடைமையாக்கு - அதில்
    தான் முளைக்கும் முக்திவிதைக் காம்பு.

    மதி, சக்தி தனக்கே உடைமையாக்கு - அது
    தாரணியில் அன்புநிலை நாட்டும் - மதி
    சக்தி தனக்கே உடைமையாக்கு - அது
    சர்வசிவ சக்தியினைக் காட்டும்.

    மதி, சக்தி தனக்கே அடிமையாக்கு - அது
    சக்திதிரு வருளினைச் சேர்க்கும் - மதி
    சக்தி தனக்கே அடிமையாக்கு - அது
    தாமதப் பொய்த் தீமைகளைப் போக்கும்.

    மதி, சக்தி தனக்கே அடிமையாக்கு - அது
    சத்தியத்தின் வெல்கொடியை நாட்டும் - மதி
    சக்தி தனக்கே அடிமையாக்கு - அது
    தாக்கவரும் பொய்ப்புலியை ஓட்டும்.

    மதி, சக்தி தனக்கே அடிமையாக்கு - அது
    சத்தியநல் லிரவியைக் காட்டும் - மதி
    சக்தி தனக்கே அடிமையாக்கு - அதில்
    சாரவரும் புயல்களை வாட்டும்.

    மதி, சக்தி தனக்கே அடிமையாக்கு - அது
    சக்திவிர தத்தை யென்றும் பூணும் - மதி
    சக்தி விரதத்தை யென்றுங் காத்தால் - சிவ
    சக்திதரும் இன்பமும்நல் லூணும்.

    மதி, சக்தி தனக்கே அடிமையாக்கு - தெளி
    தந்தமுதம் பொய்கையென ஒளிரும் - மதி
    சக்தி தனக்கே அடிமையாக்கு - அது
    சந்ததமும் இன்பமுற மிளிரும்.

    அகம், சக்தி தனக்கே உடைமையாக்கு - அது
    தன்னையொரு சக்தியென்று தேரும் - அகம்
    சக்தி தனக்கே உடைமையாக்கு - அது
    தாமதமும் ஆணவமும் தீரும்.

    அகம், சக்தி தனக்கே உடைமையாக்கு - அது
    தன்னையவள் கோயிலென்று காணும் - அகம்
    சக்தி தனக்கே உடைமையாக்கு - அது
    தன்னை யெண்ணித் துன்பமுற நாணும்.

    அகம், சக்தி தனக்கே உடைமையாக்கு - அது
    சக்தியெனும் கடலிலோர் திவலை - அகம்
    சக்தி தனக்கே உடைமையாக்கு - சிவ
    சக்தி யுண்டு நமக்கில்லை கவலை.

    அகம், சக்தி தனக்கே உடைமையாக்கு - அதில்
    சக்திசிவ நாதநித்தம் ஒலிக்கும் - அகம்
    சக்தி தனக்கே உடைமையாக்கு - அது
    சக்தி திரு மேனியொளி ஜ்வலிக்கும்.

    சிவ, சக்தி என்றும் வாழி! என்றுபாடு - சிவ
    சக்திசக்தி யென்று குதித்தாடு - சிவ
    சக்தி என்றும் வாழி! என்றுபாடு - சிவ
    சக்திசக்தி என்றுவிளை யாடு.

No comments:

Post a Comment