Wednesday, October 5, 2016

தெய்வப் பாடல்கள் - தீ வளர்த்திடுவோம்!

தீ வளர்த்திடுவோம்!
    யாகப் பாட்டு
    ராகம் - புன்னாகவராளி

    பல்லவி

    தீ வளர்த்திடுவோம்! - பெருந்
    தீ வளர்த்திடுவோம்!

    சரணங்கள்

    ஆவியி னுள்ளும் அறிவி னிடையிலும்
          அன்பை வளர்த்திடுவோம் - விண்ணின்
    ஆசை வளர்த்திடுவோம் - களி
          ஆவல் வளர்த்திடுவோம் - ஒரு
    தேவி மகனைத் திறமைக் கடவுளைச்
          செங்கதிர் வானவனை - விண்ணோர் தமைத்
    தேனுக் கழைப்பவனைப் - பெருந்திரள்
          சேர்ந்து பணிந்திடுவோம் - வாரீர்! (தீ)

    சித்தத் துணிவினை மானுடர் கேள்வனைத்
          தீமை யழிப்பவனை - நன்மை
    சேர்த்துக் கொடுப்பவனை - பல
          சீர்க ளுடையவனைப் - புவி
    அத்தனை யுஞ்சுட ரேறத் திகழ்ந்திடும்
          ஆரியர் நாயகனை - உருத்திரன்
    அன்புத் திருமகனை - பெருந்திர
          ளாகிப் பணிந்திடுவோம் வாரீர்! (தீ)

    கட்டுகள் போக்கி விடுதலை தந்திடுங்
          கண்மணி போன்றவனை - எம்மைக்
    காவல் புரிபவனைத் - தொல்லைக்
          காட்டை யழிப்பவனைத் - திசை
    எட்டும் புகழ்வளர்ந்தோங்கிட - வித்தைகள்
          யாவும் பழகிடவே - புவிமிசை
    இன்பம் பெருகிடவே - பெருந்திரள்
          எய்திப் பணிந்திடுவோம் - வாரீர் (தீ)

    நெஞ்சிற் கவலைகள் நோவுகள் யாவையும்
          நீக்கிக் கொடுப்பவனை - உயிர்
    நீளத் தருபவனை - ஒளிர்
          நேர்மைப் பெருங்கனலை - நித்தம்
    அஞ்ச லெஞ்சே லென்று கூறி எமக்குநல்
          ஆண்மை சமைப்பவனைப் - பல்வெற்றிகள்
    ஆக்கிக் கொடுப்பவனைப் - பெருந்திரள்
          ஆகிப் பணிந்திடுவோம் - வாரீர்! (தீ)

    அச்சத்தைச் சுட்டங்கு சாம்பரு மின்றி
          அழித்திடும் வானவனைச் - செய்கை
    ஆற்றுமதிச் சுடரைத் - தடை
          யற்ற பெருந்திறலை - எம்முள்
    இச்சையும் வேட்கையும் ஆசையும் காதலும்
          ஏற்றதோர் நல்லறமும் - கலந்தொளி
    ஏற்றுந் தவக்கனலைப் - பெருந்திரள்
          எய்திப் பணிந்திடுவோம் - வாரீர்! (தீ)

    வான கத்தைச்சென்று தீண்டுவன் இங்கென்று
          மண்டி யெழுந்தழலைக் - கவி
    வாணர்க்கு நல்லமுதைத் - தொழில்
          வண்ணந் தெரிந்தவனை - நல்ல
    தேனையும் பாலையும் நெய்யையும் சோற்றையும்
          தீம்பழம் யாவினையும் - இங்கேயுண்டு
    தேக்கிக் களிப்பவனைப் - பெருந்திரள்
          சேர்ந்து பணிந்திடுவோம் - வாரீர்! (தீ)

    சித்திர மாளிகை பொன்னொளிர் மாடங்கள்
          தேவத் திருமகளிர் - இன்பத்
    தேக்கிடுந் தேனிசைகள் - சுவை
          தேறிடு நல்லிளமை - நல்ல
    முத்து மணிகளும் பொன்னும் நிறைந்த
          முழுக்குடம் பற்பலவும் - இங்கேதர
    முற்பட்டு நிற்பவனைப் - பெருந்திரள்
          மொய்த்துப் பணிந்திடுவோம் வாரீர்! (தீ)

No comments:

Post a Comment