Thursday, October 6, 2016

தெய்வப் பாடல்கள் - முருகன் பாட்டு

முருகன் பாட்டு

    வீரத் திருவிழிப் பார்வையும் - வெற்றி
          வேலும் மயிலும்என் முன்னின்றே - எந்த
    நேரத் திலும்என்னைக் காக்குமே- அனை
          நீலி பராசக்தி தண்ணருட் - கரை
    ஓரத்திலே புணை கூடுதே! - கந்தன்
          ஊக்கத்தை என்னுளம் நாடுதே- மலை
    வாரத் திலேவிளை யாடுவான் -என்றும்
          வானவர் துன்பத்தைச் சாடுவான்.

    வேடர் கனியை விரும்பியே- தவ
          வேடம் புனைந்து திரிகுவான்- தமிழ்
    நாடு பெரும்புகழ் சேரவே -முனி
          நாதனுக் கிம்மொழி கூறுவான்- சுரர்
    பாடு விடிந்து மகிழ்ந்திட - இருட்
          பார மலைகளைச் சீறுவான்-மறை
    யேடு தரித்த முதல்வனும் - குரு
          வென்றிட மெய்ப்புகழ் ஏறுவான்.

    தேவர் மகளை மணந்திடத் -தெற்குத்
          தீவில சுரனை மாய்த்திட்டான், - மக்கள்
    யாவருக் குந்தலை யாயினான், - மறை
          அர்த்த முணர்ந்துநல் வாயினன், - தமிழ்ப்
    பாவலர்க் கின்னருள் செய்குவான், - இந்தப்
          பாரில் அறமழை பெய்குவான், -நெஞ்சின்
    ஆவ லறிந்தருள் கூட்டுவான், - நித்தம்
          ஆண்மையும் வீரமும் ஊட்டுவான்.

    தீவளர்த் தேபழ வேதியர் - நின்றன்
          சேவகத் தின்புகழ் காட்டினார், - ஒளி
    மீவள ருஞ்செம்பொன் நாட்டினார், - நின்றன்
          மேன்மையி னாலறம் நாட்டினார், - ஜய!
    நீவள ருங்குரு வெற்பிலே - வந்து
          நின்றுநின் சேவகம் பாடுவோம் - வரம்
    ஈவள் பராசக்தி யன்னை தான் - உங்கள்
          இன்னருளே யென்று நாடுவோம் -நின்றன் (வீரத்)

No comments:

Post a Comment