Wednesday, October 5, 2016

தெய்வப் பாடல்கள் - கலைமகளை வேண்டுதல்

கலைமகளை வேண்டுதல்

    நொண்டிச் சிந்து

    எங்ஙனம் சென்றிருந்தீர் - எனது
          இன்னுயிரே! என்றன் இசையமுதே!
    திங்களைக் கண்டவுடன் - கடல்
          திரையினைக் காற்றினைக் கேட்டவுடன்,
    கங்குலைப் பார்த்தவுடன் - இங்கு
          காலையில் இரவியைத் தொழுதவுடன்,
    பொங்கு வீர் அமிழ்தெனவே - அந்தப்
          புதுமையி லேதுயர் மறந்திருப்பேன்.

    மாதமொர் நான்காநீர் - அன்பு
          வறுமையி லேயெனை வீழ்த்திவிட்டீர்;
    பாதங்கள் போற்றுகின்றேன் - என்றன்
          பாவமெலாங் கெட்டு ஞானகங்கை
    நாதமொ டெப்பொழுதும் என்றன்
          நாவினிலே பொழிந் திடவேண்டும்;
    வேதங்க ளாக்கிடுவீர் - அந்த
          விண்ணவர் கண்ணிடை விளங்கிடுவீர்!

    கண்மணி போன்றவரே! இங்குக்
          காலையும் மாலையும் திருமகளாம்
    பெண்மணி யின்பத்தையும் - சக்திப்
          பெருமகள் திருவடிப் பெருமையையும்,
    வண்மையில் ஓதிடுவீர் - என்றன்
          வாயிலும் மதியிலும் வளர்ந்திடுவீர்!
    அண்மையில் இருந்திடுவீர்! - இனி
          அடியனைப் பிரிந்திடல் ஆற்றுவனோ!

    தானெனும் பேய்கெடவே - பல
          சஞ்சலக் குரங்குகள் தலைப்படவே,
    வானெனும் ஒளிபெறவே - நல
          வாய்மையி லேமதி நிலைத்திடவே
    தேனெனப் பொழிந்திடுவீர்! - அந்தத்
          திருமகள் சினங்களைத் தீர்த்திடுவீர்!
    ஊனங்கள் போக்கிடுவீர்! - நல்ல
          ஊக்கமும் பெருமையும் உதவிடுவீர்!

    தீயினை நிறுத்திடுவீர் - நல்ல
          தீரமுந் தெளிவுமிங் கருள்புரிவீர்!
    மாயையில் அறிவிழந்தே - உம்மை
          மதிப்பது மறந்தனன்; பிழைகளெல்லாம்
    தாயென உமைப்பணிந்தேன் - பொறை
          சார்த்திநல் லருள்செய வேண்டுகின்றேன்;
    வாயினிற் சபதமிட்டேன்; - இனி
          மறக்கிலேன், எனை மறக்ககிலீர்!

No comments:

Post a Comment