Wednesday, October 5, 2016

தெய்வப் பாடல்கள் - யேசு கிறிஸ்து

யேசு கிறிஸ்து

    'ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்.
          எழுந்து யிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்
    நேசமாமரியா' மக்த லேநா
          நேரிலே இந்தச் செய்தியைக் கண்டாள்.
    தேசத் தீர் இதன் உட்பொருள் கேளீர்;
          தேவர் வந்து நமக்குட் புகுந்தே
    நாச மின்றி நமை நித்தங் காப்பார்;
          நம் அகந்தையை நாம் கொன்று விட்டால்.

    அன்புகாண் மரியா மக்த லேநா
          ஆவி காணிதிர் யேசு கிறிஸ்து;
    முன்பு தீமை வடிவினைக் கொன்றால்
          மூன்று நாளினில் நல்லுயிர் தோன்றும்;
    பொன்பொ லிந்த முகத்தினிற் கண்டே
          போற்றுவாள் அந்த நல்லுயிர் தன்னை;
    அன்பெனும் மரியா மக்த லேநா
          ஆஹ! சாலப் பெருங்கிளி யிஃதே.

    உண்மை யென்ற சிலுவையிற் கட்டி
          உணர்வை ஆணித் தவங்கொண்டடித்தால்
    வண்மைப் பேருயிர் யேசு கிறிஸ்து
          வான மேனியில் அங்கு விளங்கும்;
    பெண்மைகாண் மரியா மக்த லேநா,
          பேணும் நல்லறம் யேசு கிறிஸ்து,
    நுண்மை கொண்ட பொருளிது கண்டீர்
          நொடியி லிஃது பயின்றிட லாகும்.

No comments:

Post a Comment