Wednesday, October 5, 2016

தெய்வப் பாடல்கள் - ஊழிக்கூத்து

ஊழிக்கூத்து

    வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட - வெறும்
    வெளியி லிரத்தக் களியொடு பூதம் பாடப் - பாட்டின்
    அடிபடு பொருளின் அடிபடு மொலியிற் கூடக் - களித்
    தாடுங் காளீ, சாமுண் டீ! கங் காளீ!
    அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
    நாடச் செய்தாய் என்னை!

    ஐந்துறு பூதம் சிந்திப் போயென் றாகப் - பின்னர்
    அதுவும் சக்திக் கதியில் மூழ்கிப் போக - அங்கே
    முந்துறும் ஒளியிற் சிந்தை நழுவும் வேகத் - தோடே
    முடியா நடனம் புரிவாய் அடுதீ சொரிவாய்!
    அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
    நாடச் செய்தாய் என்னை!

    பாழாய் வெளியும் பதறிப் போய்மெய் குலையச் - சலனம்
    பயிலும் சக்திக் குலமும் வழிகள் கலைய - அங்கே
    ஊழாம் பேய்தான் ஓஹோஹோ வென் றலைய - வெறித்
    துறுமித் திரிவாய் செருவெங் கூத்தே புரிவாய்!
    அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
    நாடச் செய்தாய் என்னை!

    சக்திப் பேய்தான் தலையொடு தலைகள் முட்டிச் - சட்டச்
    சடசட சட்டென் றுடைபடு தாளங்கொட்டி - அங்கே
    எத்திக் கினிலும் நின்விழி யனல்போய் எட்டித் - தானே
    எரியுங் கோலங் கண்டே சாகும் காலம்
    அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
    நாடச் செய்தாய் என்னை!

    காலத் தொடுநிர் மூலம் படிமூ வுலகும் - அங்கே
    கடவுள் மோனத் தொளியே தனியா யிலகும் - சிவன்
    கோலங் கண்டுன் கனல்செய் சினமும் விலகும் - கையைக்
    கொஞ்சித் தொடுவாய் ஆனந்தக்கூத் திடுவாய்!
    அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
    நாடச் செய்தாய் என்னை!

    36. காளிக்குச் சமர்ப்பணம்

    இந்த மெய்யும் கரணமும் பொறியும்
    இருபத் தேழு வருடங்கள் காத்தனன்,
    வந்தனம், அடி பேரருள் அன்னாய்,
    வைர வீ! திறற் சாமுண்டி! காளி!

    சிந்த னைதெளிந் தேனினி யுன்றன்
    திருவ ருட்கெனை அர்ப்பணஞ் செய்தேன்
    வந்தி ருந்து பலபய னாகும்
    வகைதெ ரிந்துகொள் வாழி யடி நீ!

No comments:

Post a Comment