Wednesday, October 5, 2016

தெய்வப் பாடல்கள் - கோமதி மஹிமை

கோமதி மஹிமை

    தாருக வனத்தினிலே - சிவன்
          சரண நன் மலரிடை யுளம்பதித்துச்
    சீருறத் தவம் புரிவார் - பர
          சிவன்பு கழமுதினை அருந்திடுவார்,
    பேருயர் முனிவர் முன்னே - கல்விப்
          பெருங் கடல் பருகிய சூதனென்பான்
    தேருமெய்ஞ் ஞானத்தினால் - உயர்
          சிவனிகர் முனிவரன் செப்புகின்றான்.

    வாழிய, முனிவர்களே! - புகழ்
          வளர்த்திடுஞ் சங்கரன் கோயிலிலே,
    ஊழியைச் சமைத்த பிரான், - இந்த
          உலக மெலாமுருக் கொண்டபிரான்.
    ஏழிரு புவனத்திலும் - என்றும்
          இயல்பெரும் உயிர்களுக் குயிராவான்,
    ஆழுநல் லறிவாவான், - ஒளி
          யறிவினைக் கடந்தமெய்ப் பொருளாவான்.

    தேவர்க் கெலாந்தேவன். - உயர்
          சிவபெரு மான்பண்டொர் காலத்திலே
    காவலி னுலகளிக்கும் - அந்தக்
          கண்ணுந் தானுமிங் கோருருவாய்
    ஆவலொ டருந்தவர்கள் - பல
          ஆற்றிய நாகர்கள் இருவர் முன்னே
    மேவிநின் றருள் புரிந்தான். - அந்த
          வியப்புறு சரிதையை விளம்புகின்றேன்.

    கேளீர், முனிவர்களே! இந்தக்
          கீர்த்திகொள் சரிதையைக் கேட்டவர்க்கே
    வேள்விகள் கோடி செய்தால் - சதுர்
          வேதங்க ளாயிர முறைபடித்தால்,
    மூளுநற் புண்ணியந்தான் - வந்து
          மொய்த்திடும், சிவனியல் விளங்கிநிற்கும்,
    நாளுநற் செல்வங்கள் - பல
          நணுகிடும், சரதமெய் வாழ்வுண்டாம்!

    இக்கதை உரைத்திடுவேன், - உளம்
          இன்புறக் கேட்பீர், முனிவர்களே!
    நக்க பிரானருளால் - இங்கு
          நடைபெறும் உலகங்கள் கணக்கிலவாம்!
    தொக்கன அண்டங்கள் - வளர்
          தொகைபல கோடிபல் கோடிகளாம்!
    இக்கணக் கெவரறிவார்? - புவி
          எத்தனை யுளதென்ப தியார றிவார்?

    நக்க பிரானறிவான், - மற்று
          நானறி யேன்பிற நரரறியார்.
    தொக்க பேரண்டங்கள் - கொண்ட
          தொகைக்கில்லை யில்லையென்று சொல்லுகின்ற
    தக்கபல் சாத்திரங்கள் ஒளி
          தருகின்ற வானமோர் கடல்போலாம் ,
    அக்கட லதனுக்கே - எங்கும்
          அக்கரை இக்கரை யொன்றில்லையாம்.

    இக்கட லதனக்கே - அங்கங்
          கிடையிடைத் தோன்றும்புன் குமிழிகள்போல்
    தொக்கன உலகங்கள், - திசைத்
          தூவெளி யதனிடை விரைந்தோடும்,
    மிக்கதொர் வியப்புடைத்தாம் - இந்த
          வியன்பெரு வையத்தின் காட்சி, கண்டீர்!
    மெய்க்கலை முனிவர்களே! - இதன்
          மெய்ப்பொருள் பரசிவன்சக்தி, கண்டீர்!

    எல்லை யுண்டோ இலையோ? - இங்கு
          யாவர் கண்டார் திசை வெளியினுக்கே?
    சொல்லிமொர் வரம்பிட்டால் - அதை
    . . . . . .
    (இது முற்றுப் பெறவில்லை)
    -----

No comments:

Post a Comment