Wednesday, October 5, 2016

தெய்வப் பாடல்கள் - கண்ணம்மாவின் காதல்

கண்ணம்மாவின் காதல்

    காற்று வெளியிடைக் கண்ணம்மா, - நின்றன்
          காதலை யெண்ணிக் களிக்கின்றேன் - அமு
    தூற்றினை யொத்த இதழ்களும் - நில
          வூறித் ததும்பும் விழிகளும் - பத்து
    மாற்றுப்பொன் னொத்தநின் மேனியும் - இந்த
          வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை
    வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கோர்
          விண்ணவ னாகப் புரியுமே! இந்தக் (காற்று)

    நீயென தின்னுயிர் கண்ணம்மா! - எந்த
          நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர்
    போயின, போயின துன்பங்கள் நினைப்
          பொன்னெனக் கொண்ட பொழுதிலே - என்றன்
    வாயினி லேயமு தூறுதே - கண்ணம்
          மாவென்ற பேர்சொல்லும் போழ்திலே - உயிர்த்
    தீயினி லேவளர் சோதியே - என்றன்
          சிந்தனையே, என்றன் சித்தமே! - இந்தக் (காற்று)

No comments:

Post a Comment