Wednesday, October 5, 2016

தெய்வப் பாடல்கள் - கண்ணன் பிறந்தான்

கண்ணன் பிறந்தான்

    கண்ணன் பிறந்தான் - எங்கள்
    கண்ணன் பிறந்தான் - இந்தக்
    காற்றை யெட்டுத் திசையிலுங் கூறிடும்
    திண்ண முடையான் - மணி
    வண்ண முடையான் - உயிர்
    தேவர் தலைவன் புவிமிசைத் தோன்றினன்
    புண்ணை யொழிப்பீர் - இந்தப்
    பாரினிலே துயர் நீங்கிடும் என்றிதை
    எண்ணிடைக் கொள்வீர் - நன்கு
    கண்ணை விழிப்பீர் - இனி
    ஏதுங் குறைவில்லை, வேதம் துணையுண்டு (கண்ணன்)

    அக்கினி வந்தான் - அவன்
    திக்கை வளைத்தான் - புவி
    யாரிருட் பொய்மைக் கலியை மடித்தனன்
    துக்கங் கெடுத்தான் - சுரர்
    ஒக்கலும் வந்தார் - சுடர்ச்
    சூரியன், இந்திரன், வாயு, மருத்துக்கள்,
    மிக்க திரளாய் - சுரர்,
    இக்கணந் தன்னில் - இங்கு
    மேவி நிறைந்தனர், பாவி யசுரர்கள்
    பொக்கென வீழ்ந்தார் - உயிர்
    கக்கி முடித்தார் - கடல்
    போல ஒலிக்குது வேதம் புவிமிசை. (கண்ணன்)

    சங்கரன் வந்தான், - இங்கு
    மங்கல மென்றான் - நல்ல
    சந்திரன் வந்தின் னமுதைப் பொழிந்தனன்,
    பங்க மொன் றில்லை - ஒளி
    மங்குவதில்லை, - இந்தப்
    பாரின்கண் முன்பு வானத்திலே நின்று,
    கங்கையும் வந்தாள் - கலை
    மங்கையும் வந்தாள், - இன்பக்
    காளி பராசக்தி அன்புடனெய்தினள்,
    செங்கம லத்தாள் - எழில்
    பொங்கு முகத்தாள் - திருத்
    தேவியும் வந்து சிறப்புற நின்றனள். (கண்ணன்)

No comments:

Post a Comment