Wednesday, October 5, 2016

தெய்வப் பாடல்கள் - மூன்று காதல்

மூன்று காதல்

    முதலாவது சரஸ்வதி காதல்

    ராகம் - ஸரஸ்வதி மனோஹரி தாளம் - திஸ்ர ஏகம்

    பிள்ளைப் பிராயத்திலே - அவள்
          பெண்மையைக் கண்டு மயங்கிவிட் டேனங்கு
    பள்ளிப் படிப்பினிலே - மதி
          பற்றிட வில்லை யெனிலுந் தனிப்பட
    வெள்ளை மலரணைமேல் - அவள்
          வீணையுங் கையும் விரிந்த முகமலர்
    விள்ளும் பொருளமுதம் - கண்டேன்
          வெள்ளை மனது பறிகொடுத் தேன் - அம்மா!

    ஆடிவரு கையிலே - அவள்
          அங்கொரு வீதி முனையில் நிற்பாள், கையில்
    ஏடு தரித்திருப்பாள் - அதில்
          இங்கித மாகப் பதம்படிப் பாள், அதை
    நாடி யருகணைந்தால் - பல
          ஞானங்கள் சொல்லி இனிமை செய்வாள், "இன்று
    கூடிமகிழ்வ" மென்றால் - விழிக்
          கோணத்தி லேநகை காட்டிச் செல்வாள், அம்மா!

    ஆற்றங் கரைதனிலே - தனி
          யானதோர் மண்டப மீதினிலே, தென்றற்
    காற்றை நுகர்ந்திருந்தேன் - அங்கு
          கன்னிக் கவிதை கொணர்ந்து தந்தாள், அதை
    ஏற்று மனமகிழ்ந்தே - "அடி
          என்னோ டிணங்கி மணம்புரி வாய்" என்று
    போற்றிய போதினிலே - இளம்
          புன்னகை பூத்து மறைந்துவிட்டாள், அம்மா!

    சித்தந் தளர்ந்ததுண்டோ? - கலைத்
          தேவியின் மீது விருப்பம் வளர்ந்தொரு
    பித்துப் பிடித்ததுபோல் - பகற்
          பேச்சும் இரவிற் கனவும் அவளிடை
    வைத்த நினைவை யல்லால் - பிற
          வாஞ்சை யுண்டோ? வய தங்ஙன மேயிரு
    பத்திரண் டாமளவும் - வெள்ளைப்
          பண்மகள் காதலைப் பற்றிநின் றேன், அம்மா!

    இரண்டாவது - லக்ஷ்மி காதல்

    ராகம் - ஸ்ரீராகம் தாளம் - திஸ்ர ஏகம்

    இந்த நிலையினிலே - அங்கொர்
          இன்பப் பொழிலி னிடையினில் வேறொரு
    சுந்தரி வந்துநின்றாள் - அவள்
          சோதி முகத்தின் அழகினைக் கண்டென்றன்
    சிந்தை திறைகொடுத்தேன் - அவள்
          செந்திரு வென்று பெயர்சொல்லி னாள், மற்றும்
    அந்தத் தின முதலா - நெஞ்சம்
          ஆரத் தழுவிட வேண்டுகின் றேன், அம்மா!

    புன்னகை செய்திடுவாள் - அற்றைப்
          போது முழுதும் மகிழ்ந்திருப்பேன், சற்றென்
    முன்னின்று பார்த்திடுவாள் - அந்த
          மோகத்தி லேதலை சுற்றிடுங் காண், பின்னர்
    என்ன பிழைகள் கண்டோ - அவள்
          என்னைப் புறக்கணித் தேகிடுவாள், அங்கு
    சின்னமும் பின்னமுமா - மனஞ்
          சிந்தியுளமிக நொந்திடுவேன், அம்மா!

    காட்டு வழிகளிலே - மலைக்
          காட்சியிலே புனல் வீழ்ச்சி யிலே, பல
    நாட்டுப் புறங்களிலே நகர்
          நண்ணு சிலசுடர் மாடத்தி லே சில
    வேட்டுவர் சார்பினிலே - சில
          வீர ரிடத்திலும், வேந்த ரிடத்திலும்,
    மீட்டு மவள் வருவாள் - கண்ட
          விந்தை யிலேயின்ப மேற்கொண்டு போம் அம்மா!

    மூன்றாவது - காளி காதல்

    ராகம் - புன்னாகவராளி தாளம் - திஸ்ர ஏகம்

    பின்னொர் இராவினிலே - கரும்
          பெண்மை யழகொன்று வந்தது கண்முன்பு,
    கன்னி வடிவமென்றே - களி
          கண்டு சற்றேயரு கிற்சென்று பார்க்கையில்
    அன்னை வடிவமடா! - இவள்
          ஆதிபராசக்தி தேவி யடா ! - இவள்
    இன்னருள் வேண்டுமடா! - பின்னர்
          யாவு முலகில் வசப்பட்டுப் போமடா!

    செல்வங்கள் பொங்கிவரும்! - நல்ல
          தெள்ளறி வெய்தி நலம்பல சார்ந்திடும்;
    அல்லும் பகலுமிங்கே - இவை
          அத்தனை கோடிப் பொருளினுள்ளே நின்று
    வில்லை யசைப்பவளை - இந்த
          வேலை யனைத்தையும் செய்யும் வினைச்சியைத்
    தொல்லை தவிர்ப்பவளை - நித்தம்
          தோத்திரம் பாடித் தொழுதிடு வோமடா!

No comments:

Post a Comment