Wednesday, October 5, 2016

தெய்வப் பாடல்கள் - மனப்பீடம்

மனப்பீடம்

    பல்லவி

    பீடத்தி லேறிக் கொண்டாள் - மனப்
    பீடத்தி லேறிக் கொண்டான்.

    நாடித் தவம் புரிந்து பீடுற்ற முனிவரர்
          கேடற்ற தென்று கண்டுகூடக் கருதுமொளி
    மாடத்தி லேறி ஞானக் கூடத்தில் விளையாடி
          ஓடத்தி ரிந்து கன்னி வேடத்தி ரதியைப்போல்
    ஈடற்ற கற்பனைகள் காடுற்ற சிந்தனைகள்
          மூடிக் கிடக்கு நெஞ்சின் ஊடுற்றதை யமரர்
    தேடித் தவிக்கு மின்ப வீடொத் தினிமை செய்து
          வேடத்தி சிறுவள்ளி வித்தையென் கண்ணம்மா (பீடத்தி)

    கண்ணன் திருமார்பிற் கலந்த கமலை யென்கோ?
          விண்ணவர் தொழுதிடும் வீரச் சிங்கா தனத்தே
    நண்ணிச் சிவனுடலை நாடுமவ ளென்கோ?
          எண்ணத் திதிக்குதடா இவள்பொன் னுடலமுதம்!
    பெண்ணி லரசியிவள் பெரிய எழி லுடையாள்
          கண்ணுள் மணியெனக்குக் காத லிரதியிவள்
    பண்ணி லினிய சுவைபரந்த மொழியினாள்
          உண்ணு மிதழமுத ஊற்றினள் கண்ணம்மா (பீடத்தி)

No comments:

Post a Comment