Thursday, October 6, 2016

தெய்வப் பாடல்கள் - மஹாசக்திக்கு விண்ணப்பம்

மஹாசக்திக்கு விண்ணப்பம்

    மோகத்தைக் கொன்றுவிடு - அல்லா லென்றன்
    மூச்சை நிறுத்திவிடு,
    தேகத்தைச் சாய்த்துவிடு - அல்லா லதில்
    சிந்தனை மாய்த்துவிடு,
    யோகத் திருத்திவிடு - அல்லாலென்றன்
    ஊனைச் சிதைத்துவிடு,
    ஏகத் திருந்துலகம் - இங்குள்ள
    யாவையும் செய்பவளே!

    பந்தத்தை நீக்கிவிடு - அல்லா லுயிர்ப்
    பாரத்தைப் போக்கிவிடு,
    சிந்தை தெளிவாக்கு - அல்லா லிதைச்
    செத்த உடலாக்கு,
    இந்தப் பதர்களையே - நெல்லா மென
    எண்ணி இருப்பேனோ?
    எந்தப் பொருளிலுமே - உள்ளே நின்று
    இயங்கி யிருப்பவளே!

    உள்ளம் குளிராதோ? பொய்யாணவ
    ஊனம் ஒழியாதோ?
    கள்ளம் உருகாதோ? - அம்மா! பக்திக்
    கண்ணீர் பெருகாதோ?
    வெள்ளக் கருணையிலே - இந்நாய் சிறு
    வேட்கை தவிராதோ?
    விள்ளற் கரியவளே - அனைத்திலும்
    மேவி யிருப்பவளே!

No comments:

Post a Comment