Wednesday, October 5, 2016

தெய்வப் பாடல்கள் - வேள்வித் தீ

வேள்வித் தீ

    ராகம் - நாதநாமக்கிரியை தாளம் - சதுஸ்ர ஏகம்

    ரிஷிகள்: எங்கள் வேள்விக் கூடமீதில்
          ஏறுதே தீ! தீ! - இந்நேரம்
    பங்க முற்றே பேய்க ளோடப்
          பாயுதே தீ! தீ! இந்நேரம்.

    அசுரர்: தோழரே, நம் ஆவி வேகச்
          சூழுதே தீ! தீ! - ஐயோ! நாம்
    வாழ வந்த காடு வேக
          வந்ததே தீ! தீ! - அம்மாவோ!

    ரிஷிகள்: பொன்னை யொத்தோர் வண்ணமுற்றான்
          போந்து விட்டானே! - இந்நேரம்
    சின்ன மாகிப் பொய் யரக்கர்
          சிந்தி வீழ்வாரே! - இந்நேரம்.

    அசுரர்: இந்திராதி தேவர் தம்மை
          ஏசி வாழ்ந்தோமே - ஐயோ! நாம்
    வெந்து போக மானிடர்க்கோர்
          வேதமுண்டாமோ! - அம்மாவோ!

    ரிஷிகள்: வானை நோக்கிக் கைகள் தூக்கி
          வளருதே தீ! தீ! - இந்நேரம்,
    ஞான மேனி உதய கன்னி
          நண்ணி விட்டாளே! - இந்நேரம்

    அசுரர்: கோடி நாளாய் இவ்வனத்திற்
          கூடி வாழ்ந்தோமே - ஐயோ! நாம்
    பாடி வேள்வி மாந்தர் செய்யப்
          பண்பிழந் தோமே! - அம்மாவோ!

    ரிஷிகள்: காட்டில் மேயுங் காளை போன்றான்
          காணுவீர் தீ! தீ! - இந்நேரம்
    ஓட்டியோட்டிப் பகையை யெல்லாம்
          வாட்டு கின்றானே! - இந்நேரம்.

    அசுரர்: வலி யிலாதார் மாந்த ரென்று
          மகிழ்ந்து வாழ்ந்தோமே - ஐயோ! நாம்
    கலியை வென்றோர் வேத வுண்மை
          கண்டு கொண்டாரே! - அம்மாவோ!

    ரிஷிகள்: வலிமை மைந்தன் வேள்வி முன்னோன்
          வாய்திறந் தானே! - இந்நேரம்
    மலியு நெய்யுந் தேனுமுண்டு
          மகிழ வந்தானே! - இந்நேரம்.

    அசுரர்: உயிரை விட்டும் உணர்வை விட்டும்
          ஓடி வந்தோமே - ஐயோ! நாம்
    துயிலுடம்பின் மீதிலுந் தீ
          தோன்றி விட்டானே! - அம்மாவோ!

    ரிஷிகள்: அமரர் தூதன் சமர நாதன்
          ஆர்த் தெழுந்தானே! - இந்நேரம்
    குமரி மைந்தன் எமது வாழ்விற்
          கோயில் கொண்டானே! - இந்நேரம்.

    அசுரர்: வருணன் மித்ரன் அர்ய மானும்
          மதுவை உண்பாரே - ஐயோ! நாம்
    பெருகு தீயின் புகையும் வெப்பும்
          பின்னி மாய்வோமே! - அம்மாவோ!

    ரிஷிகள்: அமர ரெல்லாம் வந்து நம்முன்
          அவிகள் கொண்டாரே! - இந்நேரம்
    நமனு மில்லை பகையு மில்லை
          நன்மை கண்டோமே! - இந்நேரம்

    அசுரர்: பகனு மிங்கே யின்ப மெய்திப்
          பாடுகின்றானே - ஐயோ! நாம்
    புகையில் வீழ இந்திரன் சீர்
          பொங்கல் கண்டீரோ! - அம்மாவோ!

    ரிஷிகள்: இளையும் வந்தாள் கவிதை தந்தாள்
          இரவி வந்தானே! - இந்நேரம்
    விளையுமெங்கள் தீயினாலே
          மேன்மையுற்றோமே! - இந்நேரம்

    ரிஷிகள்: அன்ன முண்பீரே பாலும் நெய்யும்
          அமுது முண்பீரே! - இந்நேரம்
    ம'ன்ன' நின்றீர் தேவ ரெங்கள்
          வேள்வி கொள்வீரே! - இந்நேரம்

    ரிஷிகள்: சோமமுண்டு தேர்வு நல்கும்
          ஜோதி பெற்றோமே! - இந்நேரம்
    தீமை தீர்ந்தே வாழியின்பஞ்
          சேர்த்து விட்டோமே! - இந்நேரம்

    ரிஷிகள்: உடலுயிர்மே லுணர்விலுந் தீ
          ஓங்கி விட்டானே! - இந்நேரம்
    கடவுளர் தாம் எம்மை வாழ்த்தி
          கை கொடுத்தாரே! - இந்நேரம்

    ரிஷிகள்: எங்கும் வேள்வி அமர ரெங்கும்
          யாங்கணும் தீ! தீ! - இந்நேரம்
    தங்கு மின்பம் அமர வாழ்க்கை
          சார்ந்து நின்றோமே! - இந்நேரம்

    ரிஷிகள்: வாழ்க தேவர்! - வாழ்க வேள்வி!
          மாந்தர் வாழ்வாரே! - இந்நேரம்
    வாழ்க வையம்! வாழ்க வேதம்!
          வாழ்க தீ! தீ! தீ! - இந்நேரம்

No comments:

Post a Comment