Wednesday, October 5, 2016

தெய்வப் பாடல்கள் - ஆரிய தரிசனம்

ஆரிய தரிசனம்

    ஓர் கனவு

    ராகம் - ஸ்ரீராகம் தாளம் - ஆதி

    கனவென்ன கனவே - என்றன்
    கண் துயி லாது நனவினிலே யுற்ற (கன)

    கானகங் கண்டேன் - அடர்
    கானகங் கண்டேன் - உச்சி
    வானகத்தே வட்ட மதியொளி கண்டேன். (கன)

    பொற்றிருக் குன்றம் - அங்கொர்
    பொற்றிருக் குன்றம் - அதைச்
    சுற்றி யிருக்கும் சுனைகளும் பொய்கையும். (கன)

    புத்த தரிசனம்

    குன்றத்தின் மீதே - அந்தக்
    குன்றத்தின் மீதே - தனி
    நின்றதோர் ஆல நெடுமரங் கண்டேன். (கன)

    பொன்மரத் தின்கீழ் - அந்தப்
    பொன்மரத் தின்கீழ் - வெறுஞ்
    சின்மய மானதோர் தேவன் இருந்தனன். (கன)

    புத்த பகவன் - எங்கள்
    புத்த பகவன் - அவன்
    சுத்தமெய்ஞ் ஞானச் சுடர்முகங் கண்டேன். (கன)

    காந்தியைப் பார்த்தேன் - அவன்
    காந்தியைப் பார்த்தேன் - உபசாந்தியில் மூழ்கத் ததும்பிக் குளித்தனன். (கன)

    ஈதுநல் விந்தை! - என்னே!
    ஈதுநல் விந்தை! - புத்தன்
    சோதி மறைந்திருள் துன்னிடக் கண்டனன். (கன)

    பாய்ந்ததங் கொளியே; - பின்னும்
    பாய்ந்ததங் கொளியே; - அருள்
    தேய்ந்த தென்மேனி சிலிர்த்திடக் கண்டேன். (கன)

    கிருஷ்ணார்ஜுன தரிசனம்

    குன்றத்தின் மீதே - அந்தக்
    குன்றத்தின் மீதே - தனி
    நின்ற பொற்றேரும் பரிகளும் கண்டேன். (கன)

    தேரின்முன் பாகன் - மணித்
    தேரின்முன் பாகன் - அவன்
    சீரினைக் கண்டு திகைத்துநின் றேனிந்தக் (கன)

    ஓமென்ற மொழியும் - அவன்
    ஓமென்ற மொழியும் - நீலக்
    காமன்றன் உருவுமவ் வீமன்றன் திறலும் (கன)

    அருள் பொங்கும் விழியும் - தெய்வ
    அருள் பொங்கும் விழியும் - காணில்
    இருள் பொங்கு நெஞ்சினர் வெருள் பொங்குந்த் திகிரியும் (கன)

    கண்ணனைக் கண்டேன் - எங்கள்
    கண்ணனைக் கண்டேன் - மணி
    வண்ணனை ஞான மலையினைக் கண்டேன். (கன)

    சேனைகள் தோன்றும் - வெள்ளச்
    சேனைகள் தோன்றும் - பரி
    யானையுந் தேரும் அளவில் தோன்றும். (கன)

    கண்ணன்நற் றேரில் - நீலக்
    கண்ணன்நற் றேரில் - மிக
    எண்ணயர்ந் தானொர் இளைஞனைக் கண்டேன். (கன)

    விசையன்கொ லிவனே! - வ'றல்
    விசையன்கொ லிவனே! - நனி
    இசையும் நன்கிசையுமிங் கிவனுக் கிந்நாமம். (விசை)

    வீரிய வடிவம்! - என்ன
    வீரிய வடிவம்! - இந்த
    ஆரியன் நெஞ்சம் அயர்ந்ததென் விந்தை! (விசை)

    பெற்றதன் பேறே - செவி
    பெற்றதன் பேறே - அந்தக்
    கொற்றவன் சொற்கள் செவியுறக் கொண்டேன். (பெற்ற)

    "வெற்றியை வேண்டேன்; - ஜய
    வெற்றியை வேண்டேன்! - உயிர்
    அற்றிடு மேனும் அவர்தமைத் தீண்டேன். (பெற்ற)

    சுற்றங் கொல்வேனோ? - என்றன்
    சுற்றங் கொல்வேனோ? - கிளை
    அற்றபின் செய்யும் அரசுமோர் அரசோ?" (பெற்ற)

    மிஞ்சிய அருளால் - மித
    மிஞ்சிய அருளால் - அந்த
    வெஞ்சிலை வீரன் பலசொல் விரித்தான். (கன)

    இம்மொழி கேட்டான் - கண்ணன்
    இம்மொழி கேட்டான் - ஐயன்
    செம்மலர் வதனத்திற் சிறுநகை பூத்தான். (கன)

    வில்லினை யெடடா! கையிற்
    வில்லினை யெடடா - அந்தப்
    புல்லியர் கூட்டத்தைப் பூழ்தி செய்திடடா! (வில்லினை)

    வாடி நில்லாதே; - மனம்
    வாடி நில்லாதே; - வெறும்
    பேடியர் ஞானப் பிதற்றல் சொல்லாதே. (வில்லினை)

    ஒன்றுள துண்மை - என்றும்
    ஒன்றுள துண்மை - அதைக்
    கொன்றி டொணாது குறைத்த லொண்ணாது (வில்லினை)

    துன்பமு மில்லை - கொடுந்
    துன்பமு மில்லை - அதில்
    இன்பமு மில்லை பிறப்பிறப் பில்லை. (வில்லினை)

    படைகளுந் தீண்டா - அதைப்
    படைகளுந் தீண்டா - அனல்
    சுடவு மொண்ணாது புனல்நனை யாது. (வில்லினை)

    செய்தலுன் கடனே - அறஞ்
    செய்தலுன் கடனே - அதில்
    எய்துறும் விளைவினில் எண்ணம் வைக்காதே (வில்லினை)

No comments:

Post a Comment