Thursday, October 6, 2016

தெய்வப் பாடல்கள் - வேலன் பாட்டு

வேலன் பாட்டு

    ராகம் - புன்னாகவராளி தாளம் - திஸ்ர ஏகம்

    வில்லினை யொத்த புருவம் வளர்த்தனை
          வேலவா! - அங்கோ
    வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி
          யானது வேலவா!
    சொல்லினைத் தேனிற் குழைத்துரைப் பாள்சிறு
          வள்ளியைக் - கண்டு
    சொக்கி மரமென நின்றனை
          தென்மலைக் காட்டிலே
    கல்லினை யொத்த வலிய மனங்கொண்ட
          பாதகன் - சிங்கன்
    கண்ணிரண் டாயிரங் காக்கைக்
          கிரையிட்ட வேலவா!
    பல்லினைக் காட்டிவெண் முத்தைப் பழித்திடும்
          வள்ளியை - ஒரு
    பார்ப்பனக் கோலம் தரித்துக்
          கரந்தொட்ட வேலவா!

    வெள்ளலைக் கைகளைக் கொட்டி முழங்குங்
          கடலினை - உடல்வெம்பி மறுகிக் கருகிப்
          புகைய வெருட்டினாய்.
    கிள்ளை மொழிச்சிறு வள்ளியெனும் பெயர்ச்
          செல்வத்தை - என்றும்
    கேடற்ற வாழ்வினை, இன்ப
    விளக்கை மருவினாய்.
    கொள்ளை கொண்டே அமராவதி வாழ்வு
          குலைத்தவன் - பானு
    கோபன் தலைபத்துக் கோடி
          துணுக்குறக் கோபித்தாய்
    துள்ளிக் குலாவித் திரியுஞ் சிறுவன்
          மானைப்போல் - தினைத்
    தோட்டத்தி லேயொரு பெண்ணை
          மணங்கொண்ட வேலவா!

    ஆறு சுடர்முகங் கண்டு விழிக்கின்ப
          மாகுதே, - கையில்
    அஞ்ச லெனுங்குறி கண்டு
          மகிழ்ச்சியுண் டாகுதே.
    நீறு படக்கொடும் பாவம் பிணிபசி
          யாவையும் © இங்கு
    நீங்கி அடியரை நித்தமுங்
          காத்திடும் வேலவா!

    கூறு படப்பல கோடி யவுணரின்
          கூட்டத்தைக் - கண்டு
    கொக்கரித் தண்டங் குலுஙக
          நகைத்திடுஞ் சேவலாய்
    மாறு படப்பல வேறு வடிவொடு
          தோன்றுவாள் - எங்கள்
    வைரவி பெற்ற பெருங்கன
          லே, வடி வேலவா!

No comments:

Post a Comment