Wednesday, October 5, 2016

தெய்வப் பாடல்கள் - ஜயம் உண்டு

ஜயம் உண்டு

    ராகம் - காமாஸ் தாளம் - ஆதி

    அனுபல்லவி

    ஜயமுண்டு பயமில்லை மனமே ! - இந்த
    ஜன்மத்திலே விடுதலையுண்டு நிலையுண்டு (ஜய)

    அனுபல்லவி

    பயனுண்டு பக்தியினாலே - நெஞ்சிற்
    பதிவுற்ற குலசக்தி சரணுண்டு பகையில்லை. (ஜய)

    சரணங்கள்

    புயமுண்டு குன்றத்தைப் போலே - சக்தி
    பொற்பாத முண்டு அதன் மேலே,
    நியம மெல்லாம்சக்தி நினைவன்றிப் பிறிதில்லை; குலசக்தி
    நெறியுண்டு, குறியுண்டு; வெறியுண்டு. (ஜய)

    மதியுண்டு செல்வங்கள் சேர்க்கும் - தெய்வ
    வலியுண்டு தீமையைப் பேர்க்கும்.
    விதியுண்டு தொழிலுக்கு விளைவுண்டு; குறைவில்லை
    விசனப்பொய்க் கடலுக்குக் குமரன்கைக் கணையுண்டு. (ஜய)

    அலைபட்ட கடலுக்கு மேலே - சக்தி
    அருளென்னுந் தோணியி னாலே,
    தொலையொட்டிக் கரையுற்றுத் துயரற்று விடுபட்டுத்
    துணிவுற்ற குலசக்தி சரணத்தில் முடிதொட்டு. (ஜய)

No comments:

Post a Comment