Thursday, October 6, 2016

தெய்வப் பாடல்கள் - சக்தி விளக்கம்

சக்தி விளக்கம்

    ஆதிப் பரம்பொருளின் ஊக்கம் - அதை
    அன்னை எனப்பணிதல் ஆக்கம்,
    சூதில்லை காணுமிந்த நாட்டீர்! - மற்றத்
    தொல்லை மதங்கள் செய்யும் தூக்கம்.

    மூலப் பழம்பொருளின் நாட்டம் - இந்த
    மூன்று புவியுமதன் ஆட்டம்!
    காலப் பெருங்களத்தின் மீதே - எங்கள்
    காளி நடமுலகக் கூட்டம்.

    காலை இளவெயிலின் காட்சி - அவள்
    கண்ணொளி காட்டுகின்ற மாட்சி,
    நீல விசும்பினிடை இரவில் - சுடர்
    நேமி யனைத்துமவள் ஆட்சி.

    நாரண னென்று பழவேதம் - சொல்லும்
    நாயகன் சக்திதிருப் பாதம்,
    சேரத் தவம் புரிந்து பெறுவார் - இங்கு
    செல்வம் அறிவு சிவபோதம்.

    ஆதி சிவனுடைய சக்தி - எங்கள்
    அன்னை யருள் பெறுதல் முக்தி,
    மீதி உயிரிருக்கும்போதே - அதை
    வெல்லல் சுகத்தினுக்கு யுக்தி.

    பண்டை விதியுடைய தேவி - வெள்ளைப்
    பாரதி யன்னையருள் மேவி
    கண்ட பொருள் விளக்கும் நூல்கள் - பல
    கற்றலில் லாதவனோர் பாவி.

    மூர்த்திகள் மூன்று பொருள் ஒன்று - அந்த
    மூலப் பொருள் ஒளியின் குன்று
    நேர்த்தி திகழும் அந்த ஒளியை - எந்த
    நேரமும் போற்று சக்தி என்று.

No comments:

Post a Comment