Wednesday, October 5, 2016

தெய்வப் பாடல்கள் - வேய்ங்குழல்

வேய்ங்குழல்

    ராகம் - ஹிந்துஸ்தான் தோடி
    தாளம் - ஏகதாளம்

    எங்கிருந்து வருகு வதோ? - ஒலி
    யாவர் செய்கு வதோ? - அடி தோழி!

    குன்றி னின்றும் வருகுவதோ? - மரக்
          கொம்பி னின்றும் வருகுவதோ? - வெளி
    மன்றி னின்று வருகுவதோ? - என்றன்
          மதி மருண்டிடச் செய்குதடி! - இஃது, (எங்கிருந்து)

    அலையொ லித்திடும் தெய்வ - யமுனை
          யாற்றினின்றும் ஒலிப்பதுவோ? - அன்றி
    இலையொ லிக்கும் பொழிலிடை நின்றும்
          எழுவதோ இஃதின்ன முதைப்போல்? (எங்கிருந்து)

    காட்டி னின்றும் வருகுவதோ? - நிலாக்
          காற்றைக் கொண்டு தருகுவதோ? - வெளி
    நாட்டி னின்றுமித் தென்றல் கொணர்வதோ?
          நாதமிஃதென் உயிரை யுருக்குதே! (எங்கிருந்து)

    பறவை யேதுமொன் றுள்ளதுவோ? - இங்ஙன்
          பாடுமோ அமுதக்கனற் பாட்டு?
    மறைவினின்றுங் கின்னர ராதியர்
          வாத்தியத்தினிசை யிதுவோ அடி! (எங்கிருந்து)

    கண்ண னூதிடும் வேய்ங்குழல் தானடீ!
          காதி லேயமு துள்ளத்தில் நஞ்சு,
    பண்ணன் றாமடி பாவையர் வாடப்
          பாடி யெய்திடும் அம்படி தோழி! (எங்கிருந்து)

No comments:

Post a Comment