Thursday, October 6, 2016

தெய்வப் பாடல்கள் - மஹா சக்தி வெண்பா

மஹா சக்தி வெண்பா

    தன்னை மறந்து சகல உலகினையும்
    மன்ன நிதங்காக்கும் மஹாசக்தி - அன்னை
    அவளே துணையென்று அனவரதம் நெஞ்சம்
    துவளா திருத்தல் சுகம்.

    நெஞ்சிற் கவலை நிதமும் பயிராக்கி,
    அஞ்சிஉயிர் வாழ்தல் அறியாமை, - தஞ்சமென்றே
    வையமெலாங் காக்கும் மஹாசக்தி நல்லருளை
    ஐயமறப் பற்றல் அறிவு.

    வையகத்துக் கில்லை! மனமே! நினைக்குநலஞ்
    செய்யக் கருதியிவை செப்புவேன் - பொய்யில்லை
    எல்லாம் புரக்கும் இறைநமையுங் காக்குமென்ற
    சொல்லால் அழியும் துயர்.

    எண்ணிற் கடங்காமல் எங்கும் பரந்தனவாய்
    விண்ணிற் சுடர்கின்ற மீனையெல்லாம் பண்ணியதோர்
    சக்தியே நம்மை சமைத்ததுகாண், நூறாண்டு
    பக்தியுடன் வாழும் படிக்கு.

No comments:

Post a Comment